| |
செப்டம்பர் 2001-ல் நான், அம்ருதா, ஹரீஷ் மூவரும். ஜெய்ப்பூர் சென்றோம். அப்பயணம் பற்றி அம்ருதா தன் அம்மாவிற்கு எழுதிய கடிதம். - பார்த்தசாரதி
மும்பை
1-10-2001
அன்புள்ள அம்மாவிற்கு,
அம்ருதா எழுதியது. உன் கடிதம் கிடைத்தது. ஆனால் நான் பெங்களூர், ஏலகிரி மற்றும் ஊசூரைப் பற்றி எழுதிய கடிதத்தைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை. இக்கடிதத்தில் நாங்கள் ஜெய்ப்பூர் சென்றதைப் பற்றி எழுதப் போகிறேன்.
ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரை பார்க்க வேணடுமென்ற என் வெகுநாளைய ஆசை செப்டம்பரில்தான் நிறைவேறியது. 6-ந் தேதி நான், இவர், ஹரீஷ் மூவரும் Inspection carriage எனப்படும் ஸ்பெஷல் கோச்சில் சென்றோம். கோச்சில் ஹால் -cum - டைனிங் ஹால் , 2 பெட்ரூம்கள், சமையலறை மற்றும் peon-க்கு தனியறை உண்டு. இங்கிருந்து 1130 கி.மீ. (சென்னையை விட 100 கி மீ தான் குறைவு) தூரத்தை 18 மணி நேரத்தில் கடந்து 7-ந் தேதி மதியம் ஜெய்ப்பூரை அடைந்தோம்.
வெற்றி நகரம் எனப்படும் ஜெய்ப்பூர் 1727=ம் ஆண்டு ராணா ஜெய்சிங்கினால் உருவாக்கப் பட்டது. நிறைய கோட்டைகள் கொண்ட இந்த ஊர் முகத்தை மறைக்கும் பெண்களுக்கும், வீர மீசையுடன் பெரிய முண்டாசு கட்டிய ஆண்களுக்கும் பெயர்போனது. போய் சேர்ந்த அன்று ஆல்பர்ட் ஹால் மியூசியம் (ஆல்பர்ட் காலத்திற்குப் பிறகு மாடிப்படிகளை யாரும் சுத்தம் செய்ததாகத் தெரியவில்லை), பிர்லா கோவில் மற்றும் சில கோவில்களைப் பார்த்தோம். சாயந்திரம் Dil chahta hai (மனம் விரும்புதே) என்ற இந்திப் படம் பார்த்தோம். படம் நன்றாக இருந்தது. ஆனான் தியேட்டரின் ஓசை அமைப்பு சரியாக இல்லை. 8-ந் தேதி காலை 9 மணிக்கு கிளம்பி ஆமேர் கோட்டை, ஜெய்கட் கோட்டை மற்றும் நஹர்கட் கோட்டைகளைப் பார்த்தோம். இந்தியாயிவிலேயே மிகப்பெரிய கோட்டைகளில் ஒன்றான ஆமேர் கோட்டை ஜெய்ப்பூர் உருவாதற்கு முன் முக்கிய நகரமாக இருந்தது. ஜெய் மந்திர் (வெற்றிக கோவில்) மற்றும் ஷுஷ் மஹல் (கண்ணாடி மாளிகை) இவை இங்கு பார்க்க வேண்டியவை. இங்கு காலபைரவர் கோவிலில் சாராயத்தை கடவுளுக்கு அர்ப்பணித்து அதையே பிரசாதமாகப் பெறுகின்றனர். ஆமேர் கோட்டையை விட சிறிதானாலும் ஜெய்கட் கோட்டையும் பெரியதுதான். இங்கு ஓர் உப்பரிகையில் அடிக்கும் காற்று பீச்சில் கூடப் பார்த்ததில்லை. ஆனால் எங்கள முன்று பேருக்குமே தலைமுடி குறைவாக உள்ளதால் அங்கு அதிக நேரம் நிற்கவில்லை.
8-ந் தேதி மதியம் city palace சென்றோம். இங்கு இப்போதும் அரச குடும்பத்தினர் வசிக்கிறார்கள். ஒரு பகுதியை ம்யூசியமாக பாதுகாக்கின்றனர். சில பொருட்கள் - உதாரணம் - கார்ப்பெட்கள் ஆடைகள் மிக அழகாக உள்ளன. 1902இல் மகாராஜா இங்கிலாந்து சென்றபோது தனது இரண்டு மாதத் தேவைக்காக இரண்டு பெரிய வெளளி ஜாடிகளில் கங்காஜலம் எடுத்து சென்றாராம். ஒவ்வொரு ஜாடியும் ஆறடி உயரமும் லிட்டர் கொள்ளளவும் கொண்டது. அதைப் பார்த்ததும் சென்னையில் உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் திருடர்கள் விலையுயர்ந்த தண்ணீரைக் கொட்டிவிட்டு ஜாடியை எடுத்து சென்று விடுவார்கள் என்றும் தோன்றியது. City Palace பக்கத்திலேயே Jantar Mantar எனும் வானாராய்ச்சி நிலையம் உள்ளது. புதுதில்லியுலுள் Jantar Mantar-ஐ விட இது பெரியது.
எத்தனையோ இடங்களை நான் பார்த்திருந்தாலும் 8-ந் தேதி இரவு பார்த்த Choki Dani என்ற இடம் மறக்க முடியாதது. Choki Dani என்றால் மார்வாரி மொழியில் அழகிய குக்கிராமம் என அர்த்தமாம். ஜெய்ப்பூரிலிருந்து 20 கிமீ தூரத்திலிருக்கும் இங்கு 10 ஏக்கர் நிலத்தில் கலைகள், பழக்கவழக்கங்கள் இவற்றை நிஜ கலைஞர்கள் மூலம் காட்டுகின்றனர். பரம்பரையாக வரும் கழைக்கூத்தாடிகள் மேஜிக் நிபுணர்கள், நாட்டியக் கலைஞர்கள் ஆகியலரை ஒரே இடத்தில் பார்ப்பது ஒரு த்ரில்லிங்கான அனுபவம். ராஜஸ்தானி சாப்பாட்டை மந்தார இலை தொன்னைகளில் சாப்பிட்டோம். (நாம் மணை மேல் உட்கார்ந்து இலையை தரையில் போடுவோம். அவர்கள் தரையில் உட்கார்ந்து இலையை மணை மேல் போடுகிறார்கள்.) பெரிய முண்டாசு கட்டிய bearer கள் கல்யாண வீட்டாரை கவனிப்பதைவிட நன்றாக கவனித்து பரிமாறினர். சாப்பிடும்போது ஒரு bearer தன் முண்டாசை ஹரீஷுக்கு கட்டி விட்டான். அவனுக்கு நன்றாகவே இருந்தது. கேமரா இல்லாததால் போட்டோ எடுக்கவில்லை. இரவு 7 முதல் 11 வரை நேரம் சென்றதே தெரியவில்லை. இந்த மாதிரி ஒவ்வொரு ராஜ்யத்திலும் இருந்தால் நன்றாக இருக்கும்.
9-ந் தேதி காலை இவர் office inspection செய்ய சென்றபோது நானும் ஹரீஷும் shopping செய்தோம். ராஜஸ்தானி பெயின்டிங், பொம்மலாட்ட பொம்மைகள், போர்வைகள் மற்றும் sweets வாங்கினோம். மதியம் 2.10க்கு கிளம்பி அடுத்த நாள் காலை 7 மணிக்கு மும்பை வந்து சேர்ந்தோம். பயணம் சவுகரியமாக இருந்தது.
அப்பாவிற்கு நமஸ்காரம்.
அன்புடன்
அம்ருதா
|